இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம்
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்தவாரம் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.
இதன் போது, சிறிலங்காவுடனான உறவுகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், தாம் பாகிஸ்தானுடன் மட்டுமன்றி, சிறிலங்கா உள்ளிட்ட பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடனும் பேச்சு நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.
“ஒவ்வொரு வகையான பேச்சுக்களும், ஒவ்வொரு மட்டத்தில் நடக்கிறது. தமிழ் மீனவர்களின் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக நாம் பிரச்சினை எழுப்பியுள்ளோம்.
கூட்டுக் குழுக் கூட்டம் தயாராகியுள்ளது. நான் சிறிலங்காவுக்கு செல்லவுள்ளேன் ” என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், அவர் எப்போது பயணம் மேற்கொள்கிறார் என்ற விபரத்தை வெளியிடவில்லை.