அமைதி மரத்தை பரிசளித்து மைத்திரியின் பொறுப்பை நினைவுபடுத்தினார் பாப்பரசர்
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான பாப்பரசர் முதலாவது பிரான்சிசை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று வத்திக்கானில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்பு வழக்கமானதாக இருந்தது என்றும், கடந்த ஜனவரி மாதம் சிறிலங்காவுக்குத் தாம் மேற்கொண்ட பயணத்தை பாப்பரசர் நினைவு கூர்ந்ததாகவும் வத்திக்கானில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் சிறிலங்காவின் அண்மைய நிலவரங்கள், அமைதி மற்றும் நல்லிணக்க முயற்சிகளின் நிலைமை, குறித்தும் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் முடிவில், பாப்பரசருக்கு, சிறிலங்கா அதிபர் வெள்ளிப் பரிசு ஒன்றை வழங்கினார்.
அதேவேளை சிறிலங்கா அதிபருக்கு, ஒலிவ் கிளைகளில் தயாரிக்கப்பட்ட அமைதி மர (“Tree of Peace,”) நினைவுப் பரிசை பாப்பரசருக்கு வழங்கினார்.
பாப்பரசரின் அழைப்பின் பேரில் அவரைச் சந்திப்பதற்காக சிறிலங்கா அதிபர் நேற்று வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.