அமெரிக்க குழுவை கடற்படை முகாமுக்குள் அனுமதிப்பதே குற்றம் – என்கிறார் ராஜித சேனாரத்ன
திருகோணமலை கடற்படை முகாமுக்குள் அமெரிக்க குழுவை அனுமதிப்பதே தவறு, ஐ.நா.குழுவினரை அனுமதித்ததால் எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் கிடையாது என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர்,
“சிறிலங்கா இராணுவத்தை முன்னேற்றுவதற்காக பிரித்தானிய அரசாங்கம் ஆறு மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்களை உதவியாக வழங்கியுள்ளது. இதனைக் கண்காணிப்பதற்கென பிரித்தானியா தனது அதிகாரி ஒருவரையும் நியமித்துள்ளது.
இதனால் நாட்டின் பாதுகாப்பிற்கோ அல்லது இறைமைக்கோ எந்தவிதமான அச்சுறுத்தலும் கிடையாது.
இதுதொடர்பாக கூச்சல் எழுப்பும், பொது எதிரணி என்று கூறிக் கொள்வோர், போர் நடந்த காலப்பகுதியில் அமெரிக்காவின் உதவியை நாடிய போது அமைதியாக இருந்தனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் நாமும் இணைந்திருக்கின்றோம். அப்படியானால் நாமும் ஐ.நா.வாகவே இருக்கிறோம். ஐ.நா. எனும் வலையமைப்புக்குள் பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் நாமும் இணைந்திருக்கிறோம்.
அந்த வகையில் தான், திருகோணமலை கடற்படை முகாமுக்குள் நுழைவதற்கு ஐ.நா. விசாரணைக்குழுவுக்கு அனுமதியை வழங்கப்பட்டது.
அமெரிக்க விசாரணைக் குழுவுக்கு அனுமதி வழங்கியிருந்தால் தான் அதனைத் தவறாக கருத முடியும்.
திருகோணமலை கடற்படை முகாமுக்குள் செல்வதற்கு ஐ.நா. விசாரணை குழுவுக்கு நாம் அனுமதி மறுத்திருந்திருந்தால், அது தவறாக அமைந்திருக்கும்.
அங்கு இரகசிய முகாம் ஒன்று இருப்பதாக அனைத்துலகத்துக்கு தகவல் வழங்கப்பட்டிருக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.