மகிந்த – ரணில் இரகசியமாகச் சந்திக்கவில்லையாம்
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், இரகசியச் சந்திப்பு இடம்பெற்றதாக வெளியான தகவல்களை சிறிலங்கா பிரதமர் செயலகம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக நேற்று சிறிலங்கா பிரதமர் செயலகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமரின் செயலகத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை முன்னா அதிபரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச வந்திருந்தார். அது ஒரு திறந்த சந்திப்பாகவே இடம்பெற்றது.
அப்போது, அடுத்த அறையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் அமர்ந்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமரின் செயலகத்துக்கு, மகிந்த ராஜபக்ச வருகை தந்தது இதுவே முதல் தடவையாகும்.
இதனை ஒரு இரகசியச் சந்திப்பு என்று கூறுவது அடிப்படையற்றது முற்றிலும் தவறானது என்றும் அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.