இந்திய இராணுவத் தளபதியை யாழ். வரவிடாமல் தடுத்தது மழை
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் இன்று யாழ்ப்பாணம் செல்லத் திட்டமிட்டிருந்த போதிலும், அந்தப் பயணம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் கொட்டி வரும் கனமழையினாலேயே இந்திய இராணுவத் தளபதியின் இந்தப் பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இன்று காலையில் சிறிலங்காவின் கூட்டுப் படைகளின் தலைமையகத்தில், கூட்டுப் படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் கோலித குணதிலகவையும், சிறிலங்கா விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் ககன் புலத்சிங்களவையும் இந்திய இராணுவத் தளபதி சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
இதையடுத்து இந்திய இராணுவத் தளபதி வடக்கிற்கான பயணத்தை ஆரம்பித்தார்.
எனினும் கடும் மழை பெய்து வருவதால், இரணைமடுவுக்கு அப்பால் பயணத்தை தொடரமுடியாத நிலையில், வடக்கிற்கான பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இந்திய இராணுவத் தளபதி பலாலியில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவும், நல்லூர் மற்றும் யாழ். நகரப் பகுதிகளைப் பார்வையிடவும் திட்டமிட்டிருந்தார்.
இதனையொட்டி யாழ். நகரம் மற்றும் நல்லூர் பகுதியில் இன்று காலை தொடக்கம் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்திய அமைதிப்படையில் தாம் பணியாற்றிய யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்குப் பகுதிகளை மீண்டும் பார்வையிடுவது இந்தியப் படைத்தளபதி விரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.