சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை – மேலும் இழுபறி
சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் எனப்படும் வரிச்சலுகையை மீள வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இழுத்தடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகள் மோசமடைந்ததையடுத்து. சிறிலங்காவுக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் 2010ஆம் ஆண்டு இடைநிறுத்தியிருந்தது.
இதனால், சிறிலங்காவுக்கு பெருமளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டு வந்தது.
புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெறுவதற்கான பேச்சுக்களை ஆரம்பித்தது.
இது தொடர்பாக ஆராய ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுக்கள் கொழும்புக்கு வந்து சென்றிருந்தன.
இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை மீளக் கிடைத்து விடும் என்று சிறிலங்காவின் புதிய அரசாங்கம் கூறிவந்தது.
ஆனால், அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை சிறிலங்காவுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய மூலோபாய அபிவிருத்தி மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, அடுத்த ஆண்டு ஜூன் மாதமளவில், சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீள வழங்குவதற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், மரணதண்டனையை ஒழித்தல் உள்ளிட்ட சில நிபந்தனைகளை, ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது.