மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் விசாரணை
சட்டவிரோத ஆயுத பரிமாற்றங்கள் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில் ஹெந்தவிதாரணவிடம், அதிபர் ஆணைக்குழு விசாரணை நடத்தியுள்ளது.
பாரிய, மோசடிகள், மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவுக்கு, நேற்றுமுன்தினம் அழைக்கப்பட்ட மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம், ஒரு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக ஆயுதங்களை வழங்கியது தொடர்பாகவே அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
அதிபர் ஆணைக்குழுவின் செயலாளர் லசிலி டி சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண, பின்னர், அரசபுலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டிருந்தார்.
முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவரான இவர், கடந்த அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்தவுடன், அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் பதவியை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.