ஆபத்தான நிலையில் மாதுளுவாவே சோபித தேரர்
சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவரும் சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவரும், கோட்டே நாக விகாரையின் விகாராதிபதியுமான, வண.மாதுளுவாவே சோபித தேரர் ஆபத்தான நிலையில் இருப்பதாக சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் இதய சத்திரசிகிச்சை செய்து கொண்ட மாதுளுவாவே சோபித தேரரின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால், சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், தீவிரசிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஆபத்தான நிலையில் இருந்தாலும், அவருக்கு உலகின் மிகச் சிறந்த மருத்துவ வசதிகள் அளிக்கப்படுவதாகவும், அவர் கூறியுள்ளார்.
சிறிலங்காவின் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு, சோபித தேரர் முக்கிய பங்காற்றியிருந்தார்.
மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக பொது எதிரணியை உருவாக்குவதில் அவர் பெரும் பங்கு வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.