மாலைதீவில் பிடிபட்டசினைப்பர் வீரர் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றவில்லையாம்
மாலைதீவில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும், சினைப்பர் அணி சிப்பாய் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றியவர் அல்ல என்று, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
மாலைதீவில் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றிய சினைப்பர் அணியின் முன்னாள் சிப்பாய் ஒருவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளதாக, மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
மாலைதீவில், ஆயுதங்கள் பல கைப்பற்றப்பட்ட பின்னணியிலேயே இந்தக் கைது இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில், இன்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளில், கைது செய்யப்பட்டவர் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றியவர் அல்ல என்று தெரிய வந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது. மாலைதீவில் இலங்கையர் ஒருவர் கடந்த 24ஆம் நாள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். எனினும் அவர் பற்றிய விபரங்களை அவர் வெளியிடவும் மறுத்திருந்தார்.
இந்தப் பின்னணியில், கைது செய்யப்பட்டவர் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றியவர் அல்ல என்ற சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
எனினும், மாலைதீவில் கடந்த மாதம் 24ஆம் நாள் கைது செய்யப்பட்ட இலங்கையர் யார் என்பது பற்றி சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இன்னமும் தகவல் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.