இன்றுடன் முடிகிறது இந்திய – சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி
இந்திய – சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையில் கடந்த ஆறு நாட்களாக இடம்பெற்று வந்த கூட்டுப் பயிற்சி இன்று நிறைவடையவுள்ளது. ‘SLINEX 2015’ என்று பெயரிடப்பட்ட இந்தக் கூட்டுப் பயிற்சி கடந்த மாதம் 27ஆம் நாள் ஆரம்பமானது.
திருகோணமலைத் துறைமுகம் மற்றும், கடற்பகுதியில் இடம்பெற்று வந்த இந்தக் கூட்டுப் பயிற்சி, இன்றுடன் முடிவடையவுள்ளது.
இந்தக் கூட்டுப் பயிற்சி நிறைவு நிகழ்வில், சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, முப்படைகளின் தளபதிகள், பங்கேற்கவுள்ளனர்.
அத்துடன், இந்தியத் தரப்பில், கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் பிரகாஸ் கோபாலன், இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.
கடந்த ஆறு நாட்களாக இடம்பெற்ற இந்திய சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சியில், சிறிலங்கா கடற்படையின் ஒன்பது போர்க்கப்பல்கள் மற்றும் படகுகளும், இந்தியக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் மற்றும் ஒரு கண்காணிப்பு விமானமும் பங்கெடுத்தன.
இருநாட்டுக் கடற்படைகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் இந்த கூட்டுப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.