அரசியல் கைதிகளின் விடுதலை: சிறிலங்கா அரசு உறுதியான பதில் இல்லை – சுமந்திரன் விசனம்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் எந்த உறுதியான பதிலையும் வழங்கவில்லை என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விசனம் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ள போதும், இதுவரை அரசாங்கத்திடமிருந்து உறுதியான பதில் ஏதும் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், சிறிலங்காவின் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருந்தார்.
இதன்போது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துமாறு அவர் வலியுறுத்தியிருந்தார்.” என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
மேலும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல் கைதிகளை நேரில் சென்று பார்வையிட விருப்பதாகவும், இன்று காலை அனுராதபுர சிறைச்சாலைக்குச் செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.