அனல்மின் நிலைய திட்டம் சம்பூரில் இருந்து பவுல் பொயின்ற் பகுதிக்கு மாற்றம்?
திருகோணமலை, சம்பூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள அனல் மின் நிலையத்தை, திருகோணமலை துறைமுக நுழைவாயில் பகுதியான பவுல் பொயின்ற் பகுதிக்கு மாற்றுமாறு இந்தியாவிடம், சிறிலங்கா கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவின் அரச நிறுவனமான தேசிய அனல் மின் கழகத்துடன் இணைந்து, 500 மில்லியன் ரூபா செலவில், சம்பூரில் அனல் மின் நிலையம் ஒன்றை அமைக்க சிறிலங்கா உடன்பாடு செய்திருந்தது.
இந்த அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கான துவக்கப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சம்பூரில் இருந்து திருகோணமலை மாவட்டத்தின் பவுல்பொயின்ற் பகுதிக்கு மாற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவிடம் கோரியுள்ளது.
அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக, தமது பெயரை வெளியிட விரும்பாத இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்காவின் இந்த நிலைப்பாடு குறித்து கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் வை.கே. சின்ஹாவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து 500 மில்லியன் டொலர் முதலீட்டில் உருவாக்கத் திட்டமிட்ட அனல் மின் நிலையம் தொடர்பாக, 2006ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
எனினும், ஆரம்பத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்ட இடத்தில் இருந்து, திருகோணமலைக்குத் தெற்கே வேறு இடத்துக்கு மாற்ற 2007இல் சிறிலங்கா கோரியது.
இதையடுத்து சம்பூரில் இந்த அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கான சாத்திய ஆய்வுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தான், சிறிலங்கா தரப்பில் இருந்து, வேறொரு இடத்துக்கு மாற்றும் கோரிக்கை மீண்டும் விடுக்கப்பட்டுள்ளது.
சம்பூரில் இந்த அனல் மின் நிலையத்தை அமைப்பதால், அங்கு மீளக்குடியேறும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூக பொருளாதார சூழலில் தாக்கங்கள் ஏற்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அனல் மின் நிலையத்தை அமைக்கும் இடம் மாற்றப்பட்டால் மீண்டும் புதிய சாத்திய வள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இதனால் இரண்டு மூன்று ஆண்டுகள் காலதாமதம் ஏற்படும் என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விகாஸ் ஸ்வரூப்,“இது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் பேசி வருகிறோம்.இந்த திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் அனுமதிக்காக காத்திருக்கிறோம். குறிப்பிட்ட கால வரையறைக்குள் இந்த திட்டத்தை் செயற்படுத்த இரு நாடுகளும் இணங்கியுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.
2006ஆம் ஆண்டு கையெடுத்திட்ட போது இந்த அனல் மின் நிலையம் 2011ஆம் ஆண்டு செயற்படத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.