அனைத்துலக விசாரணை, கலப்பு நீதிமன்ற யோசனை நீக்கப்பட்டது சிறிலங்காவின் பெரும் வெற்றியாம்
ஐ. நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தில் அனைத்துலக விசாரணை என்ற அழுத்தமும் கலப்பு நீதிமன்ற யோசனையும் தவிர்க்கப்பட்டுள்ளமை சிறிலங்கா அரசாங்கத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றி என்று சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் தீர்மான வரைவு தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித,
இந்த தீர்மான வரைவில் இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த அனைத்துலக பங்களிப்புடனான கலப்பு நீதிமன்றம் என்ற பதம் முற்றாக நீக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தற்போது ஆட்சியில் இருந்திருந்தால் ஜெனிவா விவகாரம் மிகவும் மோசமானதாக உருவெடுத்திருக்கும்.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளுக்கு கிடைத்துள்ள மேலும் ஒரு வெற்றியாக இதனைக் குறிப்பிட முடியும்.
ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் கடந்த மார்ச் மாதத்திலேயே இந்த விசாரணை அறிக்கையை வெளியிடத் தீர்மானித்திருந்தார்.
எமது அரசாங்கத்தின் முயற்சிகள், மற்றும் செயற்பாடுகள் காரணமாக அதனைக் காலம் தாழ்த்த முடிந்துள்ளது. இதுவும் அரசாங்கத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்.
சிறிலங்கா அனைத்துலக விசாரணையையன்றி தேசிய ரீதியிலான உள்ளக விசாரணையை வலியுறுத்தி வரும் நிலையில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானமும் உள்ளக பொறிமுறை மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
இதனை மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ள இரண்டாவது வெற்றியாகும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.