சிறிலங்காவுடனான இராணுவப் பயிற்சியில் மறைமுக நிகழ்ச்சி நிரல் இல்லை – என்கிறது சீனா
சீன- சிறிலங்கா படைகளுக்கு இடையிலான பயிற்சித் திட்டங்களில் எந்த மறைமுக நிகழ்ச்சி நிரலும் கிடையாது என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கேணல் லி செங்லின் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று, புதிதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராகப் பொறுப்பேற்ற ருவான் விஜேவர்த்தனவைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அப்போது கருத்து வெளியிட்ட மூத்த கேணல் லி செங்லின், ”ஆண்டு தோறும் 200 சிறிலங்கா படையினருக்கு சீனாவில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதேவேளை, சிறிலங்காவின் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திலும், பட்டலந்த அதிகாரிகள் பயிற்சி கல்லூரியிலும் சீன பாதுகாப்பு அதிகாரிகள் பயிற்சி பெறுகின்றனர்.
சிறிலங்கா படையினரால் நடத்தப்படும் நீர்க்காகம் என்ற கூட்டுப் போர்ப்பயிற்சிக்கும் சீனா படையினரை அனுப்பியுள்ளது.
எமது இராணுவ உறவுகள் பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையிலானது.
இராணுவ உறவுகளை விட இரு நாடுகளுக்கும் இடையில் பாரம்பரிய உறவுகளும் இருந்துள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.