கலப்பு நீதிமன்றம் குறித்து ஜனவரியிலேயே தீர்மானம் – மங்கள சமரவீர
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் முன்மொழிந்துள்ள கலப்பு நீதிமன்றத்தை அமைக்கும் பரிந்துரையை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பது தொடர்பான வரும் ஜனவரி மாதமே முடிவு செய்யப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர்-
‘நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் உள்ளக விசாரணை பொறிமுறையை தயாரிப்பதற்காக கட்டமைப்பை உருவாக்க ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டது. அதன்படி திட்டமிட்டுள்ள உள்ளக விசாரணை பொறிமுறை நான்கு பிரிவுகளை கொண்டதாக அமைந்துள்ளது.
முதலாவதாக உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்படும். அதில் இரண்டு பிரிவுகள் இருக்கும்.
மத தலைவர்களைக் கொண்ட ஒரு குழுவும் ஆணையாளர்களைக் கொண்ட ஒரு குழுவும் இயங்கும். பாதிக்கப்பட்ட மக்கள் இதன்மூலம் நீதியை பெறலாம். தென்னாபிரிக்காவின் ஆலோசனையுடன் இதனை முன்னெடுப்போம்.
இரண்டாவதாக அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் காணாமல் போனோர் தொடர்பில் பணியகம் ஒன்று அமைக்கப்படும்.
மூன்றாவதாக நீதிக்கான உரிமைக்காக நீதிமன்ற பொறிமுறை உருவாக்கப்படும்.
நான்காவதாக இழப்பீடு பொறிமுறை உருவாக்கப்படும்.
இறுதியாக கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளை போன்ற எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாது இருக்க தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.
இதுதான் நாம் திட்டமிட்டுள்ள உள்ளக விசாரணை பொறிமுறைக் கட்டமைப்பாகும்.
ஆனால் இது இறுதி பொறிமுறை அல்ல. இதனை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் ஒக்ரோபர் இரண்டாம் வாரத்தில் இருந்து கலந்துரையாடல்களும் ஆலோசனைகளும் நடத்தப்படும்.
ஜனவரி மாதம் நடுப்பகுதியில் அந்தக் கலந்துரையாடல்கள் முடிவடைந்து இறுதி பொறிமுறை தீர்மானிக்கப்படும்.
கலந்துரையாடல்களில் மத தலைவர்கள், அரசியல்வாதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களினதும் ஆலோசனைகள் பெறப்படும்.
இதன்போது ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கையின் பரிந்துரைகளும் கவனத்தில் கொள்ளப்படும்.
ஜனவரி மாதம் முதல் 18 மாதங்களில் இந்த உள்ளக விசாரணை பொறிமுறை நடைமுறைப்படுத்தி முடிக்கப்படும்.
இதன்போது அனைத்துலக ஆலோசனைகள் தொழில்நுட்ப உதவிகள் பெறப்படும். இதனை அனைத்துலகத்தை திருப்திபடுத்துவதற்காகவோ அல்லது அனைத்துலக அழுத்தத்தினாலோ செய்யவில்லை.
மாறாக இதுதான் எம்மிடம் காணப்படுகின்ற இறுதி வழிமுறையாக உள்ளது. எனவே அதனை முன்னெடுக்கின்றோம்.
இதேவேளை, ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கை மிகவும் பக்கச்சார்பற்ற முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. பெயர் விபரங்கள் எதுவும் இல்லை. சம்பவங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன. புலிகளின் மீறல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உள்ளக விசாரணை பொறிமுறை ஊடாக சிறிலங்கா இராணுவத்தினரின் இழக்கப்பட்டுள்ள புகழை மீண்டும் கட்டியெழுப்புவோம்.
சிறிலங்கா இராணுவத்தினரில் யாராவது குற்றம் இழைத்திருந்தால் அதற்கு யார் உயர்மட்டத்திலிருந்து கட்டளையிட்டது என்பதனை தேடிப்பார்ப்போம். அவ்வாறு யாராவது தவறுகள் செய்திருந்தால் தராதரம் பாராது தண்டனை வழங்கப்படும்.
இதற்கு முன்னரும் இவ்வாறு தண்டனை வழங்கிய உதாரணங்கள் உள்ளன.
தெற்கில் ஜே.வி. பி. கிளிர்ச்சியின் போது மன்னம்பேரி என்ற அழகி கொல்லப்பட்டார். அது தொடர்பில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது.
சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் கிருஷாந்தி குமாரசாமி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது.
பொல்கொட வாவியில் தமிழ் இளைஞர்களின் சடலங்கள் மிதந்த வரலாறு எம்மிடம் உள்ளது. அதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குற்றமிழைக்கும் ஒருசில இராணுவ வீரர்களுக்கு தண்டனை அளிப்பதன் மூலம் முழு இராணுவத்தினதும் புகழை மேலோங்க செய்ய முடியும்.
ராஜபக்ச ஆட்சியின்போது உயர்மட்ட கட்டளைகளினால் இராணுவத்தின் புகழ் இல்லாமல் போனது.
இம்முறை ஜெனிவாவில் எமக்கு அனைத்து நாடுகளும் ஆதரவு வழங்கும். கடந்த ஜனவரி மாதம் மகிந்த ராஜபக்ச வெற்றியீட்டியிருந்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டிருக்கும்.
ஐ.நா. அறிக்கையும் வேறு வடிவில் வந்திருக்கும். கடந்த மார்ச் மாதமே பெயர் விபரங்களுடன் அறிக்கையும் வந்திருக்கும். தற்போதைய நேரத்தில் அனைத்துலக விசாரணையும் ஆரம்பமாகியிருக்கும்.
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளையும் விதித்திருக்கும்.
அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குமே எமது நாட்டின் ஏற்றுமதிகள் செல்கின்றன.
கடந்த ஆட்சிக்காலத்தில் எமது நீதித்துறை காணப்பட்ட விதத்தை பார்க்கும்போது எம்மால் நீதித்துறையை நம்புங்கள் என்று கூற முடியாது.
நாங்கள் ஆட்சிக்கு வந்து நீதித்துறையை சுயாதீனமாக்கினோம். ஆனால் 10 ஆண்டு விவகாரத்தை ஒரே இரவில் மாற்ற முடியாது.
எம்மிடம் சிறந்த நீதிபதிகள் உள்ளனர். அவர்களை வைத்து நாம் உள்ளக விசாரணையை முன்னெடுப்போம்.
போர்க்குற்ற மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் பரிந்துரைத்துள்ள சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை அமைப்பதா இல்லையா என்பது குறித்த இறுதி தீர்மானம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் தீர்மானிப்போம்.
அனைத்துலக நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்களை சிறிலங்காவுக்கு வரவழைத்து உள்ளக விசாரணையை மேற்கொள்வதா அல்லது உள்நாட்டு நீதிபதிகளைக்கொண்டு விசாரணை பொறிமுறையை முன்னெடுப்பதா? என்பது தொடர்பிலும் ஜனவரி மாதமே தீர்மானம் எடுக்கப்படும்.
எமது விசாரணை செயற்பாட்டை நாங்கள் எமக்கேற்ற வகையில் முன்னெடுப்போம்.” என்றும் அவர் தெரிவித்தார்.