கொழும்பில் ரஷ்ய இராஜதந்திரியை தாக்கிய வாகனச் சாரதி – காணொளியால் பரபரப்பு
கொழும்பில் உள்ள வாகனத் தரிப்பிடம் ஒன்றில், ரஷ்ய இராஜதந்திரி ஒருவர் வாகனச் சாரதியால் தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த வார இறுதியில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள ரஷ்யத் தூதரகத்தில் பணியாற்றும் மூத்த இராஜதந்திரியே தாக்குதலுக்கு இலக்கானார்.
ஹைட்பார்க் கோணரில் ஆர்பிகோ வாகனத் தரிப்பிடத்தில், வாகனத்தை நிறுத்தியதில் ஏற்பட்ட சச்சரவை அடுத்தே, பிஎம்.டபிள்யூ வாகனச் சாரதியால், ரஷ்ய இராஜதந்திரி தாக்கப்பட்டார்.
நேற்றுமுன்தினம், வெளிவிவகார அமைச்சுக்குச் சென்ற குறிப்பிட்ட ரஷ்ய இராஜதந்திரி, அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்து இதுதொடர்பாக முறைப்பாடு செய்தார்.
இதையடுத்து, இந்தச் சம்பவத்துக்கான சிறிலங்காவின் சார்பில் மன்னிப்புக் கோரிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ரஷ்ய இராஜதந்திரியைத் தாக்கிய வாகனச் சாரதி மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவி்ட்டுள்ளார்.
அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிப் பதிவு ஒன்று முகநூலில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.