ஐதேக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் – தோல்வியுற்றவர்களுக்கு வாய்ப்பு
நாடாளுமன்றத் தேர்தலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த ஐதேகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், சமர்ப்பித்துள்ள தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கான பட்டியலில், தேர்தலில் தோல்வியுற்ற பலருக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஐதேக தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் 13 பேர்தொடர்பான விபரங்களை வெளியிட்டதையடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் 12 பேர் கொண்ட தமது பட்டியலை வெளியிட்டது.
இதன்படி, ஐதேக சமர்ப்பித்துள்ள பட்டியலில்- கரு ஜெயசூரிய, மலிக் சமரவிக்கிரம, டி.எம்.சுவாமிநாதன், வண.அதுரலியே ரத்தன தேரர், கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன, திலக் மாரப்பன, பேராசிரியர் சீ.ஏ.மாரசிங்க, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, எம்.எச்.எம்.நவவி, எம்.எச்.எம்.சல்மான், கலாநிதி ஹபீஸ், சிறீனல் டி மெல், அனோமா கமகே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதையடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிய வெளியிட்ட தேசியப் பட்டியலில்- ஏ.எச்.எம்.பௌசி, திலங்க சுமதிபால, எஸ்.பி.திசநாயக்க, டிலான் பெரேரா, பௌசர் முஸ்தபா, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மகிந்த சமரசிங்க, கலாநிதி சரத் அமுனுகம, விஜித் விஜிதமுனி சொய்சா, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, மலித் ஜெயதிலக, அங்கஜன் ராமநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஏழு பேர், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர்களாவர்.
இவர்களில் குறைந்தது ஐந்து பேர் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் என்பதும், மகிந்த ராஜபக்ச அணியினரின் திட்டமிட்ட பரப்புரைகளால் இவர்கள் தோற்கடிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.