தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஆறு புதுமுகங்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு
நாடாளுமன்றத் தேர்தலில் 16 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், இம்முறை, ஆறு புதுமுகங்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவாகியுள்ளார். இவர் ஏற்கனவே புளொட் சார்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதிலும், முதல்முறையாக கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றம் செல்கிறார்.
அம்பாறை மாவட்டத்தில் இருந்து, கவீந்திரன் கோடீஸ்வரன் 17,779 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்கு முதல்முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஞா.சிறிநேசன் 48,221 விருப்பு வாக்குகளைப் பெற்றும், வியாழேந்திரன் (அமல்) 39,320 விருப்பு வாக்குகளைப் பெற்றும் நாடாளுமன்றத்துக்கு முதல்முறையாகத் தெரிவாகியுள்ளனர்.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் இருந்து வடக்கு மாகாணசபை உறுப்பினரான மருத்துவர் சிவமோகன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் முதல்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.
இந்த இடங்களுக்கும் புதுமுகங்களே நியமிக்கப்படுவார்களா அல்லது, நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுள்ள வேட்பாளர்கள் எவரேனும் நியமிக்கப்படுவார்களா என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.