மகிந்தவுக்கு நிதி உதவி வழங்கவில்லை – குற்றச்சாட்டை நிராகரிக்கிறது சீன நிறுவனம்
சிறிலங்காவில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலின் போது எந்தவொரு அரசியல்வாதிக்கும், தாம் நிதியுதவி வழங்கவில்லை என்று, சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிபர் தேர்தல் பரப்புரைக்காக சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனம் 149 மில்லியன் ரூபாவை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இதுகுறித்து அந்த நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள இந்த தகவல், தவறானது, அனைத்துலக மட்டத்திலி எமது நிறுவனத்துக்கு இழிவை ஏற்படுத்தக் கூடியது என்று கூறப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தரப்புகள், தவறாக புரிந்து கொள்ளக் கூடாது, ஏனைய நாடுகளில் சீனாவின் முதலீட்டாளர்களுக்கு தவறான சமிக்ஞையை வழங்கி விடக் கூடாது என்று அந்த நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
தமது நிறுவனம் உலகில் 80இற்கும் அதிகமான நாடுகளின் உட்கட்டமைப்பு விருத்தியில் ஈடுபட்டு வருவதாகவும், அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கேற்ப செயற்படுவதாகவும், எந்தவொரு நாட்டின் அரசியல் மற்றும் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபாடு காட்டுவதில்லை என்ற கொள்கையை பின்பற்றுவதாகவும் சீன நிறுவனம் கூறியுள்ளது.