ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வு – ஐதேகவின் தேர்தல் வாக்குறுதி
அனைத்து தரப்பினரின் இணக்கத்துடன், ஒரே நாட்டுக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வு மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை நேற்று கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் வெளியிடப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும், நல்லாட்சிக்கான ஐக்கிய முன்னணியிலுள்ள கட்சிகளின் தலைவர்களும், மாதுளுவாவே சோபித தேரர் உள்ளிட்ட பௌத்த குருமாரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நாட்டை மீளவும் கட்டி எழுப்புவதற்கான 60 மாத வேலைத் திட்டத்தை உள்ளடக்கியதாக இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதில், ஊழல் மோசடிகளை ஒழிப்பது, ஜனநாயக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது, உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது மற்றும் கல்வித் துறையை அபிவிருத்தி செய்வது ஆகிய ஐந்து குறிக்கோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக ஐ.நாவினால் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை சம்பந்தமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் சகலதரப்புகளுடனும் பேச்சுக்களை நடத்தி உள்ளூர் சட்டக்கட்டமைப்பின் மூலம் தகுந்த பதில் அளிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த ஜனவரி மாதம் 8ஆம் நாள் மக்கள் பெற்ற வெற்றியை உறுதிப்படுத்த வேண்டுமானால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நல்லாட்சிகான தேசிய முன்னனி வெற்று பெறுவது அவசியமென்று தெரிவித்தார்.
அதற்கு மாறாக இந்த தேர்தலுக்குப் பின்னர், மகிந்த ராஜபக்சவின் ஆட்சி அமைக்கப்பட்டால் நாடு மீண்டும் பிரிவினைவாதத்திற்குள் தள்ளப்பட்டு ஊழல் மோசடிகள் அதிகரிக்கும் என்றும் ராஜபக்சவின் குடும்பம் மாத்திரமே நன்மை பெறும் என்றும் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்தார்.