கூட்டமைப்பின் யாழ், திருமலை, அம்பாறை மாவட்டங்களுக்கான ஆசனப்பங்கீடு குறித்து இறுதி முடிவு
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான ஆசன ஒதுக்கீடு குறித்து ஏற்கனவே பெரும்பாலும், இணக்கப்பாடு எட்டப்பட்டு விட்டதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர்,
”திருகோணமலை, யாழ்ப்பாணம், அம்பாறை ஆகிய மாவட்டங்களில், எந்தக் கட்சிக்கு எத்தனை வேட்பாளர்களுக்கு இடமளிப்பது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே முடிவு செய்து விட்டது.
மட்டக்களப்பு மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களுக்கான ஆசனப்பகிர்வு குறித்து தீர்மானிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த இரண்டு மாவட்டங்களினதும் ஆசனப் பங்கீடு இறுதி செய்யப்பட்ட பின்னர், எந்தக் கட்சிக்கு எந்த மாவட்டத்தில் எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விபரம் வெளியிடப்படும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனியான கூட்டணியாகவே போட்டியிடும். ஐதேகவுடனோ அல்லது வேறு எந்தக்கட்சியுடனோ கூட்டுச் சேராது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கு இடையில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக இன்னமும் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.
ஆனால் எல்லாக் கட்சிகளும் ஒரே அணியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற குடையின் கீழ் போட்டியிடும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.