24 மணி நேரமும் புலனாய்வுத் தகவல்கள் திரட்டப்படுகின்றன – சிறிலங்கா இராணுவப் பேச்சாளர்
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தல் இல்லை என்று சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“நாட்டின் தேசிய பாதுகாப்புத் தொடர்பான நிலை பற்றிய தகவல்களை வழங்குவதற்காக, வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணிநேரமும், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள், விரிவாக ஆராயப்பட்டு பகுப்பாய் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு வாரமும், பாதுகாப்புச் சபைக் கூட்டத்தை கூட்டும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முப்படைகளின் தளபதிகள் மற்றும் காவல்துறை மா அதிபரை சந்தித்து கலந்துரையாடுகிறார்.
இதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
நாட்டில் பாதுகாப்பைக் குறைத்துக் கொள்ளும்படியான எந்த உத்தரவையும் நாம் பெறவில்லை.
விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பு தொடர்பாக சிறிலங்கா இராணுவம் கவனித்துக் கொண்டிருக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.