மகிந்தவை பிரதமர் வேட்பாளராக தீர்மானிக்கவில்லை – ஜோன் செனிவிரத்ன
மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதென, சிறிலங்கா சுதந்திரக் கட்சியால் நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட உயர்மட்டக் குழு தீர்மானித்திருப்பதாக வெளியான செய்திகளை, அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள கட்சியின் மூத்த உறுப்பினர் ஜோன் செனிவிரத்ன நிராகரித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும், என்று ஜோன் செனிவிரத்ன, அனுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேம் ஜெயந்த, டிலான் பெரேரா, ரி.பி.எக்கநாயக்க, குமார வெல்கம ஆகியோரைக் கொண்ட குழு ஒரு மனதாகத் தீர்மானித்துள்ளதாகவும், இதுகுறித்து சிறிலங்கா அதிபரிடம் எடுத்துக் கூறவுள்ளதாகவும் கொழும்பு ஊடகங்களில் நேற்று செய்தி வெளியானது.
ஆனால் இந்தச் செய்தி பொய்யானது என்றும் அத்தகைய முடிவு எதையும், தமது குழு எடுக்கவில்லை என்றும், பிபிசி சந்தேசயவுக்கு அளித்த செவ்வியில் ஜோபன் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.
பிரதமர் வேட்பாளரை நியமிப்பது கட்சித் தலைவரின் முடிவே என்றும், குழு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் தற்போதைய நிலை குறித்தே தமது குழு ஆராய்ந்துள்ளதாகவும் கட்சியை வலுப்படுத்துவதற்கே தாம் முன்னுரிமை கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.