மகிந்தவுக்கு இடமில்லை என்பது பொய்யாம் – ஜோன் செனிவிரத்ன கூறுகிறார்
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக, வெளியான செய்திகளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான ஜோன் செனிவிரத்ன மறுத்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்கப்படாது என்றும், தேசியப்பட்டியலில் இடமளிக்கப்படாது என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்து விட்டதாக, நேற்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார்.
இதுகுறித்த கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும், மகிந்த ராஜபக்சவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் பேச்சுக்களை நடத்த நியமிக்கப்பட்டுள்ள ஆறு பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றுள்ளவருமான ஜோன் செனிவிரத்ன-
“ராஜித சேனாரத்ன ஒரு பொய்யர். மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்கப்படாது என்ற அவரது அறிக்கை பொய்யானது.
மகிந்த ராஜபக்சவுடன் இன்று ஒரு சந்திப்புக்கு ஒழுங்கு செய்யுமாறு, அதிபர் மைத்திரிபால சிறிசேன என்னிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.