ஒபாமாவின் கொழும்பு பயணம் – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கும் தெரியாதாம்
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்த ஆண்டு சிறிலங்காவுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளது தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சும் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்றுமுன்தினம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, ஏற்கனவே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி ஆகியோர் சிறிலங்கா வந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், இந்த ஆண்டு இறுதியில் சிறிலங்கா வரவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
எனினும், இதுதொடர்பான அதிகாரபூர்வ தகவல் ஏதும் தமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்று அமெரிக்கத் தூதரகம் தகவல் வெளியிட்டிருந்தது.
இந்தநிலையில், கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிசினி கொலன்னவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், அமெரிக்க அதிபரின் பயணம் தொடர்பான உறுதியான தகவல்கள் எதையும் தாம் அறியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
“அமெரிக்க அதிபர் பயணம் தொடர்பாக இப்போது எமக்கு எதுவும் தெரியாது.
இந்த ஆண்டு பிற்பகுதியில் அமெரிக்க அதிபர் ஆசியாவுக்கான பயணம் ஒன்றை மேற்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு புரிந்து கொண்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா பயணம் மேற்கொள்வதை சிறிலங்கா வரவேற்கிறது.
அது சிறிலங்காவுக்கு அமெரிக்க அதிபர் ஒருவர் மேற்கொள்ளும் முதலாவது பயணமாக இருக்கும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.