தனது பயணம் சீனாவுடனான உறவை வலுப்படுத்துமாம் – சிறிலங்கா கடற்படைத் தளபதி கூறுகிறார்
சீனாவுக்கான தனது பயணம், சீன – சிறிலங்கா இராணுவங்களுக்கு இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
பீஜிங்கில் நேற்று சீனப் பாதுகாப்பு அமைச்சர் சாங் வான்குவானைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே, சிறிலங்கா கடற்படைத் தளபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சீன பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அபிவிருத்திக்கு சீனா வழங்கி வரும் உதவிகள் மற்றும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி, சீன – சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையில் நடைமுறையில் உள்ள ஒத்துழைப்பு குறிப்பாக படையினருக்குப் பயிற்சி அளித்தல் தொடர்பான விடயத்தில், பயனுள்ள விளைவுகளைக் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது, சிறிலங்கா- சீனா இடையிலான பாதுகாப்புக் கலந்துரையாடலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள சீனா விரும்புவதாக சீன பாதுகாப்பு அமைச்சர் சாங் வான்குவான் தெரிவித்துள்ளார்.
இராணுவங்களுக்கு இடையில் ஒத்துழைப்பை விரிவாக்கவும், பல்வேறு துறைகள், மட்டங்களில் பரிமாற்றங்களை செய்யவும், உறவுகளை சுமுகமாக விருத்தி செய்யவும் விருப்பம் கொண்டுள்ளதாகவும் சீன பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.