மேலும்

எதிர்க்கட்சியின் இனவாத நிகழ்ச்சி நிரல்- பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ரணில்

ranil-parliamentசிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜூன மகேந்திரன் நியமிக்கப்பட்டதை எதிர்க்கும் பின்னணியில், இனவாத நிகழ்ச்சி நிரல் உள்ளது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி ஆளுநர் நியமனம் தொடர்பாக நேற்றுக்காலை சிறிலங்கா நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

”எந்தவொரு நாட்டினதும் குடிமகனாவதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும். அது சட்டரீதியானது.

இதேபோன்று கோத்தாபாய ராஜபக்ச அமெரிக்காவில் சத்தியப்பிரமாணம் செய்தார். பாலித கொஹன்ன அவுஸ்ரேலியாவில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

கடந்த ஆட்சியாளர்கள் அமெரிக்கா குடிமகனை இங்கு வரவழைத்து நாட்டின் பாதுகாப்பை ஒப்படைக்கும் போது நீங்கள் இது தொடர்பில் கேள்வியெழுப்பவில்லை.

2005ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் நாள் கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலராக பொறுப்பேற்றார். ஆனால், அவருக்கு இரட்டை குடியுரிமை நவம்பர் 30 ஆம் நாளே கிடைத்தது.

உங்களது சிந்தனைக்கமைய அமெரிக்க குடிமகனுக்கு அவ்வாறான பதவி வழங்கப்பட்டமை நியாயமானதாக இருக்கலாம்.

சிறிலங்கா சுதந்திர மடைந்த பின்னர், மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்தவர்,  ஜோன் எக்ஸ்டர் என்ற அமெரிக்கர் தான்.

வெளிநாட்டு சேவையை அவுஸ்திரேலிய குடிமகனுக்கு வழங்கிய போது நீங்கள் கேள்வியெழுப்பவில்லை.  அன்று வாய்கள் மூடி மௌனிகளாக இருந்தவர்கள் அர்ஜுன மகேந்திரனின் குடியுரிமை தொடர்பாக கேள்வியெழுப்புகின்றனர்.

கடந்த ஆட்சிக்காலத்தில் தினேஸ் குணவர்த்தன, அமெரிக்க குடிமக்கள் தொடர்பாக கேள்வியெழுப்பியிருந்தால் வெள்ளை வேனிலேயே பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். இன்று வெள்ளை வேனில் கடத்தல்கள் இல்லை. எனவே இன்று பலரது வாய்கள் திறக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க குடியுரிமையை கைவிடும் எவ்விதமான நடவடிக்கைகளை கோத்தாபய ராஜபக்ச இதுவரையில் மேற்கொள்ளவில்லை.

அமெரிக்க குடிமகன் ஒருவருக்கு வேறொரு நாட்டில் குடிமகனாகும் உரிமையுள்ளது. ஆனால் அமெரிக்காவுக்கு துரோகமிழைத்தால் வழக்கு தொடர்வதற்கு அமெரிக்காவிற்கு அதிகாரம் உள்ளது.

இரட்டை குடியுரிமை உள்ளவர் முதலில் அமெரிக்க குடியுரிமை கொண்டவராக கருதப்படுகின்றார். இதன் காரணமாகத்தான் எமது நாட்டில் மக்கள் பிரதிநிதிகள்,  அதிபர் ஆகியோர் இலங்கை குடிமகனாக இருக்க வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அரச பதவிகளை விடுத்து ஏனைய எந்த பதவிகளுக்கு வெளிநாட்டவர்கள் நியமிக்கப்படலாம். முன்னைய அரசாங்கத்தில் உயர் பதவி வகித்த வெளிநாட்டுக் குடியுரிமை கொண்டவர்களான உதயங்கன வீரதுங்க, பாலித கொஹன்ன, லக்ஸ்மன் ஜயவீர, ஜாலிய விக்கிரமசூரிய போன்ற பெயர் பட்டியலொன்றை உங்களுக்கு கையளிக்க முடியும்.

ராஜபக்ச ஆட்சியில் பலர் சீசல்ஸ், ஏமன் தீவுகள், பிரிட்டன், அன்டோரா, மொரோக்கோ, உகண்டா போன்ற நாடுகளில் குடியுரிமைகளை பெற்றுக் கொண்டுள்ளனர்

அர்ஜுன மகேந்திரன் சிறிலங்காவிலி பிறந்தவர், இங்கு வாழ்ந்தவர், தொழில் புரிந்தவர், கல்விமான். அவர் ஆரம்பகாலத்தில் இலங்கை மத்திய வங்கியில் 11 ஆண்டுகள் தொழில்புரிந்தவர். அதன்பின்னர் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தார். 2002ஆம் ஆண்டில் இலங்கை முதலீட்டு சபை தலைவர் பதவி வகித்தார். 2004 வரை அப்பதவியில் இருந்தார்.

ராஜபக்ச ஆட்சி உருவான பின்னர் அவர் நாட்டை விட்டு வெளியேறினார். அர்ஜுன மகேந்திரன் மட்டுமல்ல பலர் ராஜபக்ச ரெஜிமெண்ட்டுக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறினார்.

ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன் போன்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமக்கு இல்லாமல் போயுள்ளனர். அன்று இந்த நாட்டில் ஒரு பயங்கரமான இருண்ட யுகமே காணப்பட்டது.

இதன் காரணமாகவே அர்ஜுன மகேந்திரன் தொழில்புரிய சிங்கப்பூர் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு அவர் சென்றிருக்காவிட்டால் லசந்த விக்கிரமதுங்க, பிரதீப் எக்ஹெலியகொட போன்ற பலருக்கு ஏற்பட்ட நிலைமை அர்ஜுன மகேந்திரனுக்கு ஏற்பட்டிருக்கும்.

இதனால் அவர் சிங்கப்பூருக்கு சென்று தனது உயிரை பாதுகாத்துக்கொண்டார்.

கடந்த ஜனவரி 8 ஆம் நாள், மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அரசு உருவாகிய பின்னர் மரண பயத்தால் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் நாட்டுக்கு வர ஆரம்பித்தனர்.

மரண பயத்தால் வெளிநாடு சென்றவர்களை மீள இங்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அர்ஜூன மகேந்திரனை மட்டுமல்ல, அன்று ராஜபக்சவின் பயங்கரமான யுகத்திற்கு பயந்து வெளிநாடு சென்ற காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடியையும் வரவழைத்தோம்.

அன்றைய ஆட்சியில் பழிவாங்கப்பட்ட சரத் பொன்சேகா மற்றும் சிராணி பண்டாரநாயக போன்றோருக்கு நீதியை பெற்றுக் கொடுத்தோம்.

ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பொருளாதார நிபுணரல்லாத ஒருவர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பல ஊழல் மோசடிகள் இடம்பெற்றன.

இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது.

சிறிலங்காவில் பிறந்து வளர்ந்த கல்வி நிபுணத்துவம் உள்ளவர்களை நாம் இங்கு கொண்டு வந்தோம். நீங்கள் நிபுணத்துவமிக்கவர்களை கண்டு பயப்படுகின்றீர்கள். ஏனென்றால் முன்னைய ஊழல் மோசடிகள் வெளியாகும் என்ற அச்சமே காரணமாகும்.

அர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. அவருக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை விட பல மடங்கு ஊழல் மோசடிகள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

எனவே தான் எமது நல்லாட்சியின் பயணத்திற்கு தடை போடுகின்றனர். கூச்சல் போடுகின்றனர்.

உங்களது இனவாதம், மதவாதம் மற்றும் குலவாதத்தை ஜனவரி 8 ஆம் நாள் மக்கள் நிராகரித்துள்ளனர். இதனை மெதமூலனவுக்கு அனுப்பிவைத்தனர். எனவே மீண்டும் இனவாதத்தை தலைதூக்க இடமளிக்க மாட்டோம்.”  என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *