நாட்டை விட்டு ஓடமாட்டாராம் கோத்தா
தான் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற கோத்தாபய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளதால் அவர் அந்தப் பதவியை ஏற்க முடியாதுள்ளதாகவும், ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதுகுறித்து தனது முகநூல் பதிவில் பதிலளித்துள்ள கோத்தாபய ராஜபக்ச,
“சிறிலங்காவுக்கு எனது தேவை இருக்கும் போது நான் நாட்டை விட்டு வெளியேறமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். என்மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிடக்கூடும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையிலேயே, சிறிலங்காவுக்கு தனது தேவை இருப்பதாக முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.