சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதி எயர்வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்கள
சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதியாக எயர்வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்கள நியமிக்கப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா விமானப்படைத் தலைமையகத்தில் நேற்று நடந்த விமானப்படையின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில், தற்போதைய விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கோலித குணதிலக இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தம்மை கூட்டுப்படைகளின் தளபதியாக நியமிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்துள்ளதாகவும். எயர் மார்ஷல் கோலித குணதிலக, குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் நாடு திரும்பியதும் இந்த நியமனங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை தற்போதைய விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கோலித குணதிலக விரைவில் ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளான எயர்வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்கள மற்றும் எயர்வைஸ் மார்ஷல் கபில ஜெயம்பதி ஆகியோருக்கு இடையில், விமானப்படைத் தளபதி பதவியைப் பெறுவதற்கான பனிப்போர் நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.