ஜோன் கெரியின் பாதுகாப்புக்காக 200 படை அதிகாரிகள், 40 மோப்ப நாய்கள் சிறிலங்கா வருகை
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் பாதுகாப்புக்காக, அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் 200 பேர், 40 மோப்ப நாய்கள் சகிதம், சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வரும், சனிக்கிழமை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இதனையொட்டி அவருக்கு பாதுகாப்பு வழங்குவது மற்றும் அவரது பாதுகாப்புக்கான ஒழுங்குகளை மேற்கொள்வதற்காகவே, அமெரிக்க படை அதிகாரிகள், மோப்ப நாய்கள் சகிதம், கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் ஏற்கனவே ஜோன் கெரி பயணம் செய்யும் பாதைகள், அவர் செல்லும் இடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும், கண்காணிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
அமெரிக்க அதிபர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் போது வழங்கப்படும் பாதுகாப்பை விடவும், அமெரிக்க இராஜாங்கச் செயலருக்கு சிறிலங்காவில் அதிகமான பாதுகாப்பு வழங்க அமெரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.