நேபாளம், வட இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய நிலஅதிர்வு- சிறிலங்காவுக்கு பாதிப்பில்லை
நேபாளத்திலும், வட இந்தியாவிலும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ள நில நடுக்கத்தினால் சிறிலங்காவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று முற்பகல்11.45 மணியளவில் நேபாளத்தில் காத்மண்டு நகருக்கு 50. கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்த, 7.9 ரிச்டர் அளவுகோல் நிலஅதிர்வு, நேபாளத்தையும் வட இந்தியாவையும் உலுக்கியது. மீண்டும் 12.20 மணியளவில் 6.6 ரிச்டர் அளவு கோல் நில அதிர்வு பதிவானது.
இதனால், அலறிடியத்துக் கொண்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளிலும் வெளிகளிலும் தஞ்சமடைந்தனர்.
நேபாளத்தில் இந்த நிலஅதிர்வினால் 449 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், பல நூறு பேர் காயமுற்றதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட இந்திய மாநிலங்களிலும், இந்த நிலஅதிர்வினால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. புதுடெல்லி, வாரணாசி, ராஞ்சி, ஜெய்பூர், கொல்கத்தா, குவஹாத்தி, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் இந்த நில நடுக்கத்தினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
நேபாளத்தில் இந்த நிலநடுத்தினால். புராதன சின்னங்களாக, கட்டடங்கள் பலவும் முற்றாக அழிந்துள்ளன.
19ம் நூற்றாண்டு தாரகா கோபுரம் முற்றாக இடிந்து விழுந்துள்ளதுடன் அதற்குள் 50 வரையிலான சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர்.
யுனெஸ்கோவினால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட டாபர் சதுக்கமும், முற்றாகத் தரைமட்டமாகியுள்ளது.
நேபாளத்திலும், வட இந்தியாவிலும் இருந்த பழைமை வாய்ந்த புராதனச் சின்னங்களான கட்டடங்கள், கோவில்கள் அழிந்து போயுள்ளன.
இதற்கிடையே நேபாளத்தில் மையம் கொண்டிருந்த நில அதிர்வினால் சிறிலங்காவுக்குப் பாதிப்பு இல்லை என்றும், தரையில் நில அதிர்வு ஏற்பட்டதால், சுனாமி ஏற்படும் வாய்ப்பு இல்லை என்றும் சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.