ரவிராஜ் கொலையாளிகளின் இரத்த மாதிரிகள் மரபணுப் பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் இரத்த மாதிரிகள், மரபணுப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில், சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த தகவலை தெரிவித்துள்ளது..
சந்தேக நபர்களின் இரத்த மாதிரிகள், மரபணுப் பரிசோதனைக்காக ஆய்வுகூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் படுகொலை தொடர்பாக, இரண்டு அதிகாரிகள் உள்ளிட்ட நான்கு சிறிலங்கா கடற்படையினர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தொடர்பான அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்ற காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, கடந்த 2006ம் ஆண்டு நொவம்பர் 10ம் நாள், ந.ரவிராஜ் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில் அவரது மெய்க்காவலரான காவல்துறை அதிகாரியான லக்ஸ்மன் லொக்குவெலவும் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.