மகிந்த – மைத்திரி சந்தித்துப் பேச இணக்கம்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவும் நேரடியாகச் சந்தித்துப் பேச இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இரண்டு அணிகள் உருவாகியுள்ள நிலையில், கட்சியின் ஒற்றுமையை பேணும் நோக்கில் இந்தச் சந்திப்புக்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சந்திப்பு எங்கு, எப்போது நடைபெறும் என்று இன்னமும் தீர்மானிக்கப்படாவிடினும், சந்திப்பு நடைபெறப் போவது உறுதாகியுள்ளது.
மகிந்த ராஜபக்சவையும், மைத்திரிபால சிறிசேனவையும் நேரடியாகச் சந்தித்துப் பேச வைக்கும் முயற்சியில், அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை ஏற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இருதலைவர்களுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பில், தேர்தல் குறித்து முக்கியமாக ஆராயப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.