ஜோன் கெரியின் பயணம் முடியும் வரை நாடாளுமன்றம் கலைக்கப்படாது
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் பயணம் நிறைவடையும் வரை, நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்று, சிறிலங்காவின் பிரதி நீதி அமைச்சர் சுஜீன செனசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கட்டடத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
”19வது திருத்தச்சட்டத்தை அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றத் தவறினால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும்.
அதேவேளை, மிக விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, தனது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வரை நாடாளுமன்றம் கலைக்கப்படாது.
ஒரு வெளிநாட்டு அரச பிரமுகர் நாட்டுக்கு வரும் போது, அவருக்கு வாழ்த்துக் கூறுவது நாடாளுமன்றப் பாரம்பரியம்.
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளவும் கூட்ட முடியாது என்பதால், அமெரிக்க இராஜாங்கச் செயலரின் பயணம் முடிந்த பின்னரே நாடாளுமன்றம் கலைக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்தார்.
அடுத்த மாதம் முதல் வாரத்தில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளலாம் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியான போதும், அதனை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமோ, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சோ இன்னமும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.