நாடு திரும்பினார் பசில் – கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் வெளியார் நுழையத் தடை
சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக நாடு திரும்பியுள்ளார்.
கடந்த ஜனவரி 8ம் நாள் நடந்த அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததையடுத்து, அமெரிக்காவுக்குச் சென்ற அவர், இன்று பிற்பகல் 1.45 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த எமிரேட்ஸ் விமானம் மூலம், நாடு திரும்பினார்.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய முறைகேடுகள் குறித்து இவர் விசாரணை செய்யப்படவுள்ள நிலையில், விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படலாம் என்று முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதேவேளை, பசில் ராஜபக்சவை வரவேற்பதற்கான சுமார் 1000 வரையான ஆதரவாளர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வெளியே ஒன்று கூடியுள்ளனர்.
அதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் விருந்தினர் வரவேற்பு பகுதி இன்று மதியத்துடன் மூடப்பட்டுள்ளது.
அதேவேளை விமான நிலைய வீதிகளில் தடுப்புகளுடன் சிறிலங்கா காவல்துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய பசில் ராஜபக்ச, வெளியில் கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.
இதன்போது சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற வகையில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளுக்குப் பதிலளிக்கவே நாடு திரும்பியதாகத் தெரிவித்தார்.
அதேவேளை, பசில் ராஜபக்சவை வரவேற்க முன்னைய அரசாங்கத்தின் பிரமுகர்கள் எவரும் விமான நிலையத்துக்கு வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.