சிறிலங்கா படைகள் வெளியேற்றப்பட வேண்டும் – மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீர்மானம்
தமிழ்ப் பகுதிகளில் போரின் போது நிறுத்தப்பட்ட ஆயுதப் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று, விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டில், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று நடந்த இந்த மாநாட்டில், இலங்கைப் பிரச்சினை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில், “சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளாகிய போதிலும், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை, அர்த்தபூர்வமான வகையில் தீர்க்கப்படவில்லை.
தமிழ்ப் பகுதிகளில் போரின் போது நிறுத்தப்பட்ட ஆயுதப் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும்.
2009 மே மாதம் முடிவுக்கு வந்த சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில், இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, சிறிலங்கா அரசாங்கம் நம்பகமான விசாரணைகளை நடத்த வேண்டும்.
இந்த விசாரணைகள் சுதந்திரமாகவும், நம்பகமானவர்களை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும்.
ஐ.நா பொதுச்செயலர் நியமித்த நிபுணர் குழுவினதும், நல்லிணக்க ஆணைக்குழுவினதும், பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
தமிழ்மக்களின் மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி, மற்றும் வடக்கு மாகாணசபைக்கு மேலதிக அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இதுதொடர்பாக சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம், வாக்குறுதிகளை அளித்து சில குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும், பழைய நிலைமைகளில் பெரியளவிலான மாற்றங்கள் நிகழாதது கவலையளிக்கிறது.
13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, வடக்கு, கிழக்கு மாகாணசபைகளுக்கு கூடுதல் அளிகாரங்களையும், தமிழ்மொழிக்கு சம அந்தஸ்தையும் அளிக்க வேண்டும்.
சிங்கள மக்களுக்கு இணையான அதிகாரங்கள் தமிழ்மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
இடம்பெயர்ந்த தமிழ்மக்கள் தமது சொந்த இடங்களிலேயே குடியமர்த்தப்பட வேண்டும். அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் மீளவும் ஒப்படைக்கப்பட வேண்டும்.
அவர்களின் பொருளாதார மற்றும் சமூக நிலையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ், மற்றும் முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
சிறிலங்காவின் புதிய அரசியல் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, இராஜதந்திர நடவடிக்கைகளின் மூலம், இந்திய அரசாங்கம் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினையை பேச்சுக்களை நடத்தி விரைவாக தீர்க்க வேண்டும்” என்றும் மாநாட்டில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.