சென்னை – கொழும்பு இடையே நான்காவது விமானசேவையை தொடங்குகிறது சிறிலங்கன் எயர்லைன்ஸ்
சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் சென்னைக்கான விமான சேவைகளை நாளை முதல் அதிகரிக்கவுள்ளது. இதன்படி கொழும்புக்கும் சென்னைக்கும் இடையில் நாளொன்றுக்கு நான்கு விமான சேவைகள் நடத்தப்படவுள்ளன.
இதையடுத்து, சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வாராந்த விமான சேவைகளின் எண்ணிக்கை 86 ஆக அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் மிகவேகமாக வளர்ச்சி பெற்று வரும் நகரான சென்னை, தமக்கு முக்கியமான ஒரு சந்தை என்று சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் பொதுமுகாமையாளர் சமிந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
புதிய விமான சேவையின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் இருதரப்பு உறவகளை மேலும் பலப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு, சென்னை – கொழும்பு இடையே, சிறிலங்கன் விமான சேவை மூலம், 225,000 பயணிகள் பயணம் மேற்கொண்டதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.