இந்தியப்படைகளை சிறிலங்காவுக்கு அனுப்பியது கொள்கை ரீதியான தவறு – ஜெனரல் வி.கே.சிங்
சிறிலங்காவுக்கு இந்திய அமைதிப்படையை அனுப்ப எடுக்கப்பட்ட முடிவு, கொள்கை ரீதியான ஒரு உயர்மட்டத் தவறு என்று, இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
“சிறிலங்காவுக்குச் செல்லும் முடிவு இராணுவ மட்டத்தில் எடுக்கப்படவில்லை.
விடுதலைப் புலிகளும், சிறிலங்கா அரசாங்கமும், போரிட்டுக் கொண்டிருந்த போது, இந்திய, சிறிலங்கா அரசாங்கங்கள் செய்து கொண்ட உடன்பாட்டுக்கு அமையவே, அந்த முடிவு எடுக்கப்பட்டது.
அந்த நேரத்தில் நிலைமை மோசமாக இருந்தது.
எம்மால் பயிற்சி அளிக்கப்பட்டவர்களுக்கு எதிராகவே நாம் போரிட வேண்டியிருந்தது.
இந்திய அமைதிப்படையினரின் நடவடிக்கைகளின் போது, விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை வேட்டையாடும் சந்தர்ப்பங்கள் பல கிடைத்தன.
ஆனால் ஒவ்வொரு முறையும் அவருக்குப் பாதுகாப்பாக பாதை ஒன்றை அளிக்குமாறு வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
ஒரு கட்டத்தில், சிறிலங்கா அதிபர் பிரேமதாச, இந்தியப் படைகளுக்கு எதிராகப் போரிடுவதற்கு விடுதலைப் புலிகளுக்கு உதவியளித்தார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.