ஐபிஎல் துடுப்பாட்டத் தொடர்: சென்னைப் போட்டிகளில் சிறிலங்கா வீரர்களுக்கு அனுமதி மறுப்பு
இந்தியாவில் ஆரம்பமாகியுள்ள ஐபிஎல் துடுப்பாட்டப் போட்டித்தொடரில், பங்கேற்கும் அணிகளில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா துடுப்பாட்ட வீரர்கள் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் விளையாடமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், கொடுமைகளைக் கண்டித்து, சிறிலங்காவின் துடுப்பாட்ட மற்றும் ஏனைய விளையாட்டு வீரர்கள், தமிழ்நாட்டில் போட்டிகளில் பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
பல துடுப்பாட்ட, உதைபந்தாட்ட அணிகள், தமிழ்நாட்டில் இருந்து சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
ஆண்டு தோறும் நடந்து வரும் ஐபிஎல் போட்டித் தொடரில், பங்கேற்கும் அணிகளில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா துடுப்பாட்ட வீரர்கள் தமிழ்நாட்டில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதில்லை.
தமிழ்நாடு மாநில அரசாங்கத்தின் எதிர்ப்பினால், இந்த நிலை நீடித்து வருகிறது.
தற்போது ஆரம்பமாகியுள்ள ஐபிஎல் போட்டித் தொடரிலும், சிறிலங்கா வீர்ர்கள், சென்னையில் நடைபெறும் போட்டியில் ஆடமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும், சென்னை சுப்பர்கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி நடக்கவுள்ளது.
இதில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா வீரர், அஞ்சலோ மத்யூ விளையாடமாட்டார் என்று தெரியவருகிறது.
அவர், தமது அணியுடன் சென்னைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.