19வது அரசியலமைப்புத் திருத்த வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது
சிறிலங்கா அரசியலமைப்பின் 19வது திருத்த யோசனை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் 19வது அரசியலமைப்புத் திருத்தப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
முன்னதாக, கடந்த 16ம் நாள் இந்த அரசியலமைப்பு திருத்த யோசனை வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
நேற்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
ஏற்கனவே வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அரசியலமைப்புத் திருத்த யோசனைகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசியலமைப்புத் திருத்த வரைவு, சிறிலங்கா அதிபரின் நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப்படுத்தும் பல யோசனைகளை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.