மேலும்

உயர்பாதுகாப்பு வலயக் காணிகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் – வளலாயில் மைத்திரி உறுதி

maithri-return-land (1)வடக்கிலுள்ள மக்களின் காணிப்பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும், உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில், உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு பகுதி காணிகளை ஒப்படைக்கும் நிகழ்வு இன்று காலை வளலாயில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் அச்சம், சந்தேகம் என்பவற்றை நீக்குவதன் மூலமே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். தமிழ் மக்களிடம் இருக்கும் அச்சம், சந்தேகம் என்பவற்றை நீக்கவேண்டுமாயின் அவர்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதை நாம் உணர்வோம்.

நாங்கள் மக்களின் எல்லாப் பிரச்சினைகளையும் படிப்படியாகத் தீர்த்து வைத்து வருகிறோம். குறிப்பாக மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்த்து வைக்க முற்பட்டுள்ளோம்.

இத்தகைய பணிகளில் சில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் குறைபாடுகள் இருந்தாலும் கூட நாம் எமது பணிகளைத் தொடர்ந்தால் தான் அவற்றையும் நிவர்த்தி செய்து நிறைவேற்ற முடியும்.

மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காகவே நாங்கள் இந்த புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளோம்.

maithri-return-land (2)

maithri-return-land (3)

maithri-return-land (4)

நாங்கள் உங்கள் பகுதிகளுக்கு வரும்போது இங்குள்ள குறைபாடுகள், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து உங்கள் அரசியல் தலைவர்கள் எங்களுக்குத் தெளிவாகத் தெரியப்படுத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்திலும் உங்கள் பிரச்சினைகளை அரசியல் தலைவர்கள் எடுத்துரைக்கின்றனர்.

தமிழ் மக்களாகிய உங்களுக்கு பாரதூரமான பல பிரச்சினைகள் உள்ளன என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் தான் தேர்தலில் எனக்கு வாக்களித்தீர்கள்.

எனவே உங்களின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் எமது ஆட்சிக்காலத்தின் போது தீர்வு காணுவோம் என்பதை நான் இந்தச் சந்தர்ப்பத்திலே உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்காலத்தில் நாம் உங்கள் மத்தியில் மேடைகளில் பேசுவதற்காக வரமாட்டோம். பதிலாக கிராமங்கள் தோறும் சென்று உங்கள் பிரச்சினைகள் குறித்து உங்களிடமே நேரடியாகப் பேசி தீர்வு காண்பதே எமது அடுத்த நடவடிக்கைகளாக இருக்கும்.

புதிய அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முக்கிய பல திட்டங்களை மேற்கொண்டுள்ளது. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதே மிக மிக முக்கியமானது.

இதற்காக நாம் சந்தேகத்தையும் பீதியையும் இல்லாமல் நீக்கிவிட வேண்டும். தமிழ் மக்களது பிரச்சினைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு அவற்றுக்குத் தீர்வு காண்பதன் மூலம்தான் உங்களின் சந்தேகத்தையும் பீதியையும் இல்லாமல் செய்ய முடியும்.

இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அதிபர்செயலணி ஒன்றை கடந்த மாதம் உருவாக்கி செயற்படுத்தி வருகிறோம். இதில் முக்கியமான பணிகளை முன்னெடுத்து எமக்கு ஊக்கம் தருபவராக முன்னாள் அதிபர் சந்திரிகா இருக்கிறார்.

உங்களது பிரச்சினைகளை நாங்கள் மிகவும் அவதானமாகச் செவிமடுத்து வருகிறோம். படிப்படியாக உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்போம்.

உங்களுடைய மனங்களில் இருக்கும் சந்தேகம், அச்சம் எல்லாவற்றையும் தீர்க்கக் கூடிய வகையில் நாம் உங்கள் பிரச்சினைகளை அவதானித்து வருகிறோம்.

இன்று இந்த நிகழ்வு என்பது எமது ஆரம்பமே தவிர இது ஒரு முடிவு என்று நீங்கள் எண்ணிவிடக்கூடாது. இதனை முடிவுறுத்த எமக்கு இன்னும் சில காலம் தேவைப்படுகிறது.

இன்று நாங்கள் உங்கள் காணிகளை கையளிப்பது மட்டுமல்லாமல், இங்கே அழிந்துபோன கட்டுமானங்களை எல்லாம் மீளமைத்துத் தருவதும் எமது நோக்கம்.

இந்தப் பிரதேசத்துக்கு வந்து இந்தக் காணிகளைப் பார்த்தபோது எமது உள்ளத்திலே மிகவும் மனவேதனை ஏற்பட்டுள்ளது. நீங்கள் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கவில்லை. இந்தப் பகுதியை பார்த்தால் அது நன்றாகத் தெரியும்.

மாத்தளை,கண்டி, நுவரெலியா பிரதேசங்கள் போல அல்ல இந்த பிரதேசங்கள். இங்குள்ளவர்கள் குடிதண்ணீருக்கு என்ன செய்கிறார்கள் என்று நான் வடக்கு முதலமைச்சரிடம் கேட்டேன். அப்போதுதான் மக்கள் குடிதண்ணீருக்காக பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளனர் என்று தெரியவந்தது.

காணிகளை விடுவிப்பது மட்டுமன்றி, உங்களுக்கு வாழக்கூடிய சூழலையும் சுற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அவசியம் எமக்கு இருக்கிறது.

உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதே போன்று நாங்களும் உங்கள் மீது கவனம் செலுத்துவோம்.

ஒரு பிள்ளை அழும்போது அது எதற்காக அழுகிறது என்று பார்க்கவேண்டும். அதேபோன்று வடபகுதி மக்களது பிரச்சினைகளையும் நாம் கருத்தில் கொண்டு எதிர்வரும் காலத்தில் வடபகுதியில் பெரும் மாற்றத்தை கொண்டு வரவிருக்கிறோம்.

அதற்குத் தேவையான எல்லா வசதிகளையும் நாம் ஏற்படுத்திக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் வடக்கு மாகாணசபைக்கும் நாம் பூரண வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வசாவிளான், வளலாய் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 60 பேருக்கு இந்த நிகழ்வில் காணி உறுதிப் பத்திரங்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் வழங்கினர்.

இந்த நிகழ்வில், அமைச்சர்கள் எம்.கே.டி.எஸ் குணவர்த்தன, டி.எம்.சுவாமிநாதன், விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவை சேனாதிராசா, சரவணபவன், சுரேஸ் பிரேமச்சந்திரன், டக்ளஸ் தேவானந்தா, சந்திரகுமார் மற்றும், வட மாகாணசபையின் தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம், வடமாகாண அமைச்சர்கள், ஐங்கரநேசன், டெனீஸ்வரன் மற்றும் சபை உறுப்பினர்கள், இராணுவ, காவல்துறை, அரச அதிகாரிகள் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *