மேலும்

சரத் பொன்சேகாவை பீல்ட் மார்ஷலாக பதவிஉயர்த்தும் நிகழ்வை மேற்கு நாடுகள் புறக்கணிப்பு

Sarath-Fonsekaசிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி  ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவிஉயர்வு அளிக்கும் விழா நாளை கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில், இந்த நிகழ்வை மேற்கு நாடுகளின் தூதுவர்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிடுகையில், நாளை நடைபெறவுள்ள சரத் பொன்சேகாவின் பீல்ட் மார்ஷல் நிகழ்வில் இருந்து விலகி இருக்க கொழும்பிலுள்ள  பல முக்கிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் இருந்து ஒதுங்கியிருக்க, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள், தூதரக தலைமை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

தற்போதைய அமெரிக்கத் தூதுவர் இந்த நிகழ்வில் பங்கேற்க மாட்டார் என்றும், அவர் பதில் தூதுவராகவே பணியாற்றுவதாகவும், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனவே, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக தலைமை அதிகாரி இந்த நிகழ்வில் பங்கேற்கமாட்டார்.

அதேவேளை, கொழும்பிலுள்ள ஜேர்மனித் தூதுவரும், இந்த நிகழ்வில் பங்கேற்கமாட்டார் என்றும், அவர் கொழும்புக்கு வெளியே செல்லவுள்ளதாகவும், ஜேர்மனி தூதரக ஊடக அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொழும்புக்கான பிரான்ஸ் தூதுவர் தற்போது நாட்டில் இல்லை என்றும், எனவே அவர் இந்த நிகழ்வில் பங்கேற்கமாட்டார் என்றும், பிரான்ஸ் தூதரக ஊடக அதிகாரி கூறியுள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாக சிறிலங்கா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த நாடுகளின் தூதரக அதிகாரிகளே இந்த நிகழ்வில் இருந்து ஒதுங்கியிருக்கவுள்ளனர்.

அதேவேளை, சில நாடுகளின் தூதரகங்கள், இந்த நிகழ்வுக்கு இரண்டாம் நிலை அதிகாரிகளை அனுப்பத் தீர்மானித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *