13வது திருத்தத்துக்கு அப்பால் செல்லும்படி சிறிலங்காவிடம் வலியுறுத்தினார் மோடி- சுஸ்மா தகவல்
விரைவாகவும், முழுமையாகவும், 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமும், அதற்கு அப்பால் செல்வதன் மூலமும், சிறிலங்காவில் சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்த முடியும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில் இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணம் குறித்து விளக்கமளித்து ஆற்றிய உரையில், இந்தய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்தியப் பிரதமர் சிறிலங்கா பயணத்தின் போது, மீனவர்களின் பிரச்சினை உள்ளிட்ட பரந்தளவிலான விவகாரங்கள் குறித்து, பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
நல்லிணக்கம், முன்னேற்றம், மற்றும் அமைதியை நோக்கிய சிறிலங்காவின் புதிய பயணத்துக்கு இந்தியாவின் உண்மையான ஆதரவைவும், வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள், தமிழர்கள் உள்ளிட்ட எல்லா சமூகத்தினதும் அபிலாசைகளுக்கு இடமளிக்கும் வகையில், சமத்துவமான, நீதியான, அமைதியான, கண்ணியமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு, சிறிலங்கா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இந்தியா துணைநிற்கும்.
விரைவாகவும், முழுமையாகவும், 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமும், அதற்கு அப்பால் செல்வதன் மூலமும், இந்த செயல்முறைக்குப் பங்களிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்பதையும், பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்” என்றும் சுஸ்மா சுவராஜ் குறிப்பிட்டார்.