ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஜூனில் சிறிலங்கா வருகிறார்
சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பையேற்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வரும் ஜூன் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் பலவந்தமாக மற்றும் சுயவிருப்பின்றிக் காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் குறித்த செயலணியையும், சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
“மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான நம்பகமான உள்நாட்டு விசாரணை மிகவும் முக்கியமான ஒன்று.
உள்நாட்டு விசாரணைகளை நடத்துவதன் மூலம், சிறிலங்கா குறித்த அனைத்துலக நம்பகத்தன்மையை அதிகரிக்கும், வெளிநாட்டு முதலீடுகளுக்கான சிறந்த சூழலை உருவாக்கும்.
இறைமை என்பது அதிகளவான பொறுப்புணர்வின் மூலமே கிடைக்கின்றது, அதில் தன்னுடைய மக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய கடமைகள் முக்கியமானவை.
அரசாங்கங்கள் அவ்வாறான கடமைகளை செய்ய தவறும் போது,நாங்கள் விரும்பாத அனைத்துலக தலையீடுகள் தவிர்க்க முடியாதவையாகி விடும்.
ராஜபக்சக்கள் மனித உரிமைகள் குறித்த கரிசனைகளுக்கு தீர்வை காணமறுத்ததன் மூலம் உள்நாட்டில் பல்வேறு சமூகத்தினரை பகைத்துக் கொண்டனர்.
சிறிலங்காவின் அனைத்துலக சகாக்களையும் பகைத்துக் கொண்டனர்.
சில தனிநபர்களால் இழைக்கப்பட்ட குற்றங்கள் காரணமாக சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை போக்குவதற்காக அந்த நபர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுத்து சிறிலங்கா படையினரின் கௌரவத்தை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் நோக்கம் எனவும், மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.