17 பேர் கொண்ட குழுவுடன் நாளை பிரித்தானியா செல்கிறார் மைத்திரி
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை பிரித்தானியாவுக்கான ஐந்து நாள் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார். அவருடன் 17 பேர் கொண்ட குழுவொன்றும் லண்டன் செல்லவுள்ளது.
சிறிலங்கா அதிபருடன் பிரித்தானியா செல்லும் குழுவில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், ஊடக குழுவை சேர்ந்த ஒருவர் ஆகியோரே இடம்பெறவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.
இந்தப் பயணத்தின் போது, கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளில், சிறிலங்கா அதிபர் பங்கேற்கவுள்ளார்.
இந்த நிகழ்வில் கொமன்வெல்த் பொதுச்செயலர் கமலேஷ் சர்மாவும் பங்கேற்பார்.
மேலும் அவர் லண்டனில் தங்கியிருக்கும் போது, பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தையும் சந்தித்துப் பேசுவார்.
சிறிலங்கா அதிபர் வரும் 11ம் நாள் நாடு திரும்பவும் திட்டமிட்டுள்ளார்.