மேலும்

இராணுவ ஆட்சியில் இருந்து விடுபட்டது திருகோணமலை – சிவில் அரச அதிபர் நியமனம்

N.A.A. Pushpakumara

கோப்பு படம்- புதிய அரசஅதிபர்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரான சிவில் அதிகாரியான என்.ஏ.ஏ.புஸ்பகுமார நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து எட்டு ஆண்டுகால இராணுவ ஆட்சியில் இருந்து திருகோணமலை மாவட்டம் விடுபட்டு, நேற்று முதல் சிவில் நிர்வாகம் மீளவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த எட்டு ஆண்டுகளாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் பி.ரி.டி.சில்வாவே பணியாற்றி வந்தார்.

புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், சிவில் நிர்வாகத்தில் பணியாற்றிய வந்த ஒரே இராணுவ அதிகாரியாக இவர் மட்டுமே எஞ்சியிருந்தார்.

இவர் அரசாங்க அதிபராகப் பணியாற்றிய காலத்தில் இவரைச் சுற்றி எப்போதும் இராணுவ அதிகாரிகளே காணப்பட்டனர்.

திருகோணமலையில் நீண்டகாலமாக நீடிக்கும் இராணுவ ஆட்சிக்கு முடிவு கட்டுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன.

எனினும், தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையாக வாழும் திருகோணமலை மாவட்டத்துக்கு சிங்கள அதிகாரி ஒருவரையே அரசாங்க அதிபராக புதிய அரசாங்கமும் நியமித்துள்ளது.

அதேவேளை, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள என்.ஏ.ஏ.புஸ்பகுமார கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *