சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பங்கு – ஜோன் கெரி பாராட்டு
சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை வகித்த பங்கை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி பாராட்டியுள்ளார். இன்று ஜெனிவாவில் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடரில், உயர்மட்டப் பிரதிநிதிகளின் உரை அமர்வில் ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார்.
“பர்மா, சிறிலங்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் அளித்த வாக்குறுதிகள் மற்றும் அவர்களின் கடப்பாடுகளை நிறைவேற்றுவதை ஊக்குவித்து உண்மையான மாற்றங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை பங்காற்றியுள்ளது.
அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலம், மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோரை நிச்சயம் மாற்ற முடியும். எனினும் அது ஒரே இரவில் நடந்து விடாது.
அழுத்தங்களின் மூலம் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளும், சுதந்திரத்தை விரிவுபடுத்திக் கொள்ளும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.