மேலும்

சிறிலங்கா – இந்திய இராணுவ அதிகாரிகள் மட்டப் பேச்சுக்கள் கொழும்பில் ஆரம்பம்

indian--army-colomboசிறிலங்கா – இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான நான்காவது கட்டப் பேச்சுக்கள் இன்று கொழும்பில் சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

ஆண்டு தோறும் இந்திய, சிறிலங்கா நாடுகளின் இராணுவ அதிகாரிகளும் பங்கேற்கும் – அதிகாரிகள் மட்டக் கலந்துரையாடல் நடத்தப்படுகிறது.

இந்த வகையில், நான்காவது இராணுவ அதிகாரிகள் மட்டக் கலந்துரையாடல் இன்று  சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் ஆரம்பமாகியுள்ளது. வரும் 4ம் நாள் வரை இந்தக் கலந்துரையாடல் தொடர்ந்து இடம்பெறும்.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்க இந்திய இராணுவத்தின் சார்பில், அனைத்துலக உறவுகளுக்கான மேலதிக பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ருஸ்டம் பட்நாயக் தலைமையிலான அதிகாரிகள் கொழும்பு வந்துள்ளனர்.

இராணுவச் செயலாளர் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தலைமையில், மேஜர் ஜெனரல் பி.ஏ.பெரேரா, பிரிகேடியர் கே.பி.ஏ.ஜெயசேகர, பிரிகேடியர், டி ஆப்ரூ, கேணல் குலதுங்க ஆகிய அதிகாரிகள் சிறிலங்கா இராணுவத் தரப்பில் பங்கேற்கவுள்ளனர்.

indian--army-colombo (2)

indian--army-colombo (1)

இரண்டு நாட்டு இராணுவங்களுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது விரிவான பேச்சுக்கள் நடத்தப்படும்.

குறிப்பாக, பயிற்சி, விநியோகம், விளையாட்டு, நிர்வாகம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்து ஆராயப்படும்.

இந்தப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவை, இந்திய இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ருஸ்டம் பட்நாயக் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *