கச்சதீவு செல்ல முயன்ற கிளிநொச்சி இளைஞர் இராமேஸ்வரத்தில் கைது
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உற்சவம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், அனுமதியின்றி கச்சதீவு செல்ல முயன்ற கிளிநொச்சியைச் சேர்ந்த இலங்கை அகதி ஒருவர் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் தங்கியிருந்த 27 வயதான பிரசாந்த என்ற இந்த இளைஞர், இன்று கச்சதீவு செல்லும் பயணிகளுடன் புறப்பட முயன்ற போது, முறையான ஆவணங்களின்றி பயணம் செய்ய முயன்றதாக கூறி, கியூ பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, கச்சதீவுக்கு செல்ல முயன்ற ஊடகவியலாளர் ஒருவர் உள்ளிட்ட 23 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதால் அவர்களும் பயணம் செய்ய தமிழ்நாடு காவல்துறையினர் அனுமதி மறுத்து விட்டனர்.
இம்முறை தமிழ்நாட்டில் இருந்து கச்சதீவு செல்வதற்கு சுமார் 4000 பேர் பதிவு செய்திருந்தனர்.
இவர்களை 110 படகுகளில் ஏற்றிச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று மாலை 4 மணியளவில் கச்சதீவு உற்சவம் ஆரம்பமாகி, நாளை காலை நடைபெறும், கூட்டுத் திருப்பலியுடன் நிறைவடையும்.