சபதத்துடன் சிறிலங்கா வந்துள்ள புதிய சீனத் தூதுவர்
சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் மூலோபாய ஒத்துழைப்பு கூட்டுறவை இறுதிப்படுத்தும் முயற்சிகளைத் தொடரப் போவதாக சிறிலங்காவுக்கான புதிய சீனத் தூதுவர் யி ஜியான்லியாங் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் தூதுவராகப் பதவியேற்பதற்காக நேற்று முன்தினம் கொழும்பு வந்து சேர்ந்தார் யி ஜியான்லியாங்.
அதிபர் ஜி ஜின்பிங்கின் வரலாற்றுப் பயணத்தின் போது செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகளையும், முன்னைய அரசாங்கத்துடனான பேச்சுக்களில் முக்கிய இடம் பிடித்திருந்த மூலோபாய ஒத்துழைப்பு கூட்டுறவை நடைமுறைப்படுத்துவதும், தனது கடப்பாடு என்று அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவும், சிறிலங்காவும், வரலாற்று ரீதியான உறவுகளைக் கொண்டிருப்பதாகவும், இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தவும், மக்களுக்கு இடையிலான தொடர்புகளை ஊக்குவிக்கவும், தனது பதவிக்காலத்தில் முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், புதிய சீனத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்ரெம்பர் மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங் கொழும்பு வந்திருந்த போது, சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் மூலோபாய ஒத்துழைப்பு கூட்டுறவை ஏற்படுத்துவது பற்றிக் கலந்துரையாடல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.